பாரதிப் பெண்ணே போரிடு பெண்ணே எழுஎழு பெண்ணே!
ஆணாதிக்க எதிர்ப்புப் படையில் நடையிடு முன்னே!
ஆயிரம் கால விலங்கினை நொறுக்கும் போர்ப்படை ஆரம்பம்!
தங்கமாய் அல்ல நீ சிங்கமாய் வந்ததால் கோட்டையில் பூகம்பம்!
(பாரதிப்)
பூமியில் பாதி பெண்ணே -அவள் பூமித்தாயின் கண்ணே!
எனினும் அவள் நிலை இங்கே -ஒரு இனிப்பு தடவிய புண்ணே!
ஆணை விஞ்சிய உழைப்பு-ஆனால் அடிமை நாய் போல் பிழைப்பு!
வானை நகர்த்தும் வலிவு-ஆனால் வாழ்வை நகர்த்த தவிப்பு!
பெண்ணை பிடித்த பீடைகள் இனி ஓட
நவ யுக நாயகி வா புவி உனதாக!
(பாரதிப்)
பிறந்ததும் தந்தையின் அடிமை-நீ மணந்ததும் கணவனின் அடிமை!
முதுமையில் மகனுக்கு அடிமை-உன் மூளையில் எத்தனை சிலுவை!
இல்லம் படகு நீ துடுப்பு-ஆனால் இருப்பிடமோ புகை அடுப்பு!
குழந்தை நீ மட்டுமே சுமந்து-சுமந்தே குறுகிச் சிறுத்ததுன் இடுப்பு!
சந்தையில் விற்கிற மந்தையைப் போன்ற நிலை!
தகர்த்திடு பெண்ணடிமை எனும் நாசவலை!
(பாரதிப்)
பெண்ணடிமைத்தனம் பேணிக்-கொண்டே பெண்ணை தெய்வம் எனல் நன்றோ!
செருப்பால் அடித்தபின் தீர்த்தம்-கொஞ்சம் தெளிப்பது கேவலம் அன்றோ?
ஆவேசப்பட அல்ல -பெண் அழுவதற்கே சுதந்திரமே!
கோபம் கொள்ளவும் அல்ல - பெண் குனிவதற்கே சுதந்திரமே!
விமானம் ஓட்டும் பெண் எனும் போதிலுமே
வீட்டினில் பானை அவள் மட்டும் ஏந்தணுமே!
(பாரதிப்)
கல்லுடைக்கையில் சிறு சில்லாய்-களை எடுக்கையில் குனிந்து வில்லாய்,
சூளையில் நீ செங்கல்லாய்-தினம் துடித்தாய் வாழ்வே முள்ளாய்!
சட்டம் சொல்வது உண்டு -நீ சரி நிகர் சமானம் என்று! சரி நிகர் ஊதியம் ஏது?-
உனை சாய்த்தது ஆள்பவர் சூது!
சோகை நோயில்நீ! ரத்தம் இல்லை உனக்கு!
தோகை மயில் என கவிதை சொல்வது எதற்கு?
(பாரதிப்)
கவிதையில் மட்டும் நிலவு-நிஜத்தில் கண்டேன் நீ வெறும் சருகு!
உணவு உனக்கு கனவு -வற்றி ஒட்டிப் போனதுன் வயிறு!
வாழை இலை என வயிறை -கவி வருணிப்பான் அது சரிதான்!
விருந்தே பரிமாறாத - ஒரு வெறும் வாழை இலை அது தான்!
நூற்றில் எண்பது பெண் வறுமை நிலைமை! நோஞ்சான் நிலமை! கவிதையில் தான் வளமை !
(பாரதிப்)
சொத்துக்காரி என்றாலும் -வெறும் கூலிக்காரி என்றாலும், எத்தனை காலம் இவளே -
பார் இரண்டாம் தரக்குடி மகளே ! பிறந்தாய் பெண்ணே எனினும் -
மீண்டும் பிறப்பாய் புதிதாய் புதிதாய்! நிலவாய் அல்ல அல்ல
-சினந்து எழுவாய் சூரியக் கதிராய்
ஆண் பெண் சமத்துவம் இனி வரும் யுகதருமம்
அனைத்துக்கும் அதுவே அடிப்படை தருமம்
(பாரதிப்)